41
ஏழாவது மாதத்தில், நெத்தானியாவின் மகனான இஸ்மவேல் அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வந்தான். (நெத்தானியா எலிசாமாவின் மகன்.) இஸ்மவேல் அவனது பத்து ஆட்களோடு வந்தான். அந்த ஆட்கள் மிஸ்பா பட்டணத்துக்கு வந்தனர். இஸ்மவேல் அரச குடும்பத்தில் ஒரு உறுப்பினன். அவன் யூதா அரசனிடம் ஒரு அதிகாரியாக இருந்தவன். இஸ்மவேலும் அவனது ஆட்களும் கெதலியாவோடு உணவு உண்டனர். அவர்கள் சேர்ந்து உண்ணும்பொழுது, இஸ்மவேலும் அவனோடு வந்த பத்துபேரும் தீடீரென்று எழுந்து அகிக்காமின் மகனான கெதலியாவை வாளால் கொன்றனர். கெதலியா பாபிலோன் அரசனால் யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இஸ்மவேல், கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த மற்ற ஜனங்களையும் கொன்றுவிட்டான். இஸ்மவேல் கெதலியாவோடு இருந்த பாபிலோனிய வீரர்களையும் கொன்றான்.
4-5 கெதலியா கொலை செய்யப்பட்ட அந்நாளுக்குப் பிறகு, 80 பேர் மிஸ்பாவுக்கு வந்தனர். அவர்கள் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த 80 பேரும் தங்கள் தாடிகளை சிரைத்திருந்தனர், தம் ஆடைகளைக் கிழித்திருந்தனர், தம்மைத்தாமே காயப்படுத்தியிருந்தனர். அவர்கள் சீகேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். அவர்களில் எவருக்கும் கெதலியா கொலை செய்யப்பட்டது தெரியாது. இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், “என்னோடு வந்து அகிக்காமின் மகனான கெதலியாவைச் சந்தியுங்கள்” என்றான். அந்த 80 பேரும் அவனோடு மிஸ்பாவுக்குச் சென்றனர். பிறகு இஸ்மவேலும் அவனது ஆட்களும் அந்த 80 பேரைக் கொன்று அந்த 80 பேரின் உடல்களையும் ஆழமான ஒரு குழிக்குள் போடத் துவங்கினார்கள். ஆனால் அவர்களுள் 10 பேர் இஸ்மவேலிடம், “எங்களைக் கொல்லாதே. எங்களிடம் கோதுமையும் பார்லியும் உள்ளன. எங்களிடம் எண்ணெயும் தேனும் உள்ளன. நாங்கள் அவற்றை வயல்களில் மறைத்து வைத்துள்ளோம். அவற்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறோம்” என்றனர். எனவே இஸ்மவேல் அந்தப் பத்துப் பேரையும் தனியாக விட்டுவிட்டான். அவன் அவர்களை மற்றவர்களோடு கொல்லவில்லை. (அந்த அகழி மிகப் பெரியது. இது ஆசா என்னும் யூதா அரசனால் கட்டப்பட்டது. ஆசா அரசன் இந்த அகழியைக் கட்டினான். எனவே போர்க் காலங்களில் அதில் தண்ணீர் இருக்கும். இஸ்ரவேல் அரசனான பாஷாவிடமிருந்து நகரத்தைக் காப்பாற்ற இதனைச் செய்தான். இது நிரம்பும்வரை இஸ்மவேல் மரித்த உடல்களைப் போட்டான்.)
10 இஸ்மவேல், மிஸ்பா நகரத்தில் இருந்த அனைத்து ஜனங்களையும் கைப்பற்றினான். பின்னர் அம்மோனியர் வாழ்ந்த நகரத்தை கடக்கப் புறப்பட்டான். அவர்களில் அரசனது மகள்களும் மற்ற விடுபட்ட மனிதர்களும் இருந்தனர். இவர்களை கெதலியா கவனித்துக்கொள்ளும்படி நேபுசாராதானால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நேபுசராதான், பாபிலோன் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
11 கரேயாவின் மகனான யோகனானும் அவனோடு இருந்த படை அதிகாரிகளும் இஸ்மவேல் செய்த அனைத்து கெட்டச் செயல்களைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 எனவே யோகனானும் படை அதிகாரிகளும் பல ஆட்களும் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலோடு சண்டையிடப் போனார்கள். அவர்கள் கிபியோன் நகரத்திலுள்ள பெருங்குளத்து தண்ணீர் அருகில் அவனைப்பிடித்தனர். 13 இஸ்மவேலால் கைது செய்யப்பட்டவர்கள் யோகனானையும் அவனோடு இருந்த படை அதிகாரிகளையும் பார்த்தனர். அந்த ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 14 பிறகு இஸ்மவேலால் சிறை பிடிக்கப்பட்ட அந்த ஜனங்கள் அனைவரும் கரேயாவின் மகனான யோகனானிடம் ஓடிச் சென்றனர். 15 ஆனால் இஸ்மவேலும் அவனது எட்டு ஆட்களும் யோகனானிடமிருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்கள் அம்மோனிய ஜனங்களிடம் ஓடிப்போனார்கள்.
16 எனவே, கரேயாவின் மகனான யோகனானும் அவனது படையதிகாரிகளும் கைதிகளை விடுவித்தனர். இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்திருந்தான். மிஸ்பாவிலுள்ள ஜனங்களைக் கைப்பற்றியிருந்தான். மீதியிருந்தவர்களில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், சபை அதிகாரிகள் என இருந்தனர். யோகனான் அவர்களை கிபியோன் நகரிலிருந்து திரும்பக் கொண்டு வந்தான்.
எகிப்திற்குத் தப்பித்தல்
17-18 யோகனானும் மற்றப் படை அதிகாரிகளும் கல்தேயர்களுக்கு பயந்தனர். பாபிலோனின் அரசன் கெதலியாவை யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்துவிட்டான். யோகனான், கல்தேயர்கள் கோபமாக இருப்பார்கள் என்று அஞ்சினான். எனவே அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போக முடிவு செய்தனர். எகிப்துக்குப் போகும் வழியில் அவர்கள் கெருத்கிம்காமினில் தங்கினார்கள். கெருத்கிம்காமின் பெத்லேகம் நகருக்கு அருகில் இருக்கிறது.