கர்த்தர் நேபுகாத்நேச்சாரை ஆளுபவனாக ஏற்படுத்தினார்
27
எரேமியாவிற்குக் கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது. யூதாவின் அரசனாக சிதேக்கியா ஆன நான்காம் ஆட்சி ஆண்டில் இது வந்தது. சிதேக்கியா, யோசியா அரசனின் மகன். இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, நீ பட்டையான வார் மற்றும் கம்பங்களையும்கொண்டு ஒரு நுகத்தடி செய். அதை உன் கழுத்தின் பின்னால் பூட்டிக்கொள். பிறகு நீ ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய அரசர்களுக்குச் செய்தியை (அதுபோன்று நுகத்தை) அனுப்பு. எருசலேமுக்கு வந்துள்ள இந்த அரசர்களின் தூதுவர்களிடம் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பார்க்கும்படி செய்திகள் அனுப்பு. அந்தத் தூதுவர்களிடம் அவர்களது எஜமானர்களிடம் செய்தியைக் கூறுமாறுச் சொல். அவர்களிடம் சொல்: சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் தேவன் சொல்கிறார்: ‘நான் பூமியையும் அதன் மேல் ஜனங்களையும் உண்டாக்கினேன் என்று சொல். நான் பூமியின் மேல் அனைத்து மிருகங்களையும் உண்டாக்கினேன். நான் இவற்றை எனது பெரும் வல்லமையாலும் பலமான கையாலும் செய்தேன். இந்தப் பூமியை நான் விரும்புகிற யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன். நான் இப்பொழுது பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் உங்கள் நாடுகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அவன் எனது வேலையாள். அவனுக்குக் காட்டு மிருகங்கள்கூட பணியும்படிச் செய்வேன். அனைத்து நாடுகளும் நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்யும். அவனது மகனுக்கும் பேரனுக்கும் சேவைசெய்யும். பிறகு பாபிலோன் தோற்கடிக்கப்படக் கூடிய காலம் வரும். பல நாடுகளும் பெரும் அரசர்களும் பாபிலோனைத் தம் வேலையாளாக வைப்பார்கள்.
“‘ஆனால், இப்பொழுது சில நாடுகளும் இராஜ்யங்களும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்ய மறுக்கிறது. அவர்கள் நுகங்களைத் தம் கழுத்தில் மாட்டிக்கொள்ள மறுக்கலாம். அது நிகழந்தால், நான் செய்வது இதுதான். அந்த நாட்டை நான் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயால் தண்டிப்பேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அந்த நாட்டை அழித்து முடிக்கும்வரை இதனைச் செய்வேன். நேபுகாத்நேச்சாருக்கு எதிராகச் சண்டையிட்ட நாடுகளை அழிக்க நான் அவனைப் பயன்படுத்துவேன். எனவே, உங்கள் தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல மந்திரத்தைப் பயன்படுத்தும் ஆட்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். தங்கள் கனவுகளுக்கு விளக்கங்கள் கூறுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். மரித்தவர்களோடும் மந்திரம் பயிற்சி செய்வோர்களோடும் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அந்த ஜனங்கள் எல்லாம் உங்களிடம், ‘பாபிலோன் அரசனுக்கு அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள். 10 ஆனால் அந்த ஜனங்கள் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் தாய் நாட்டிலிருந்து தூர நாட்டிற்குக் கொண்டுப்போகப்பட அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். நான் உங்களை வீட்டிலிருந்து போகும்படி வற்புறுத்துவேன். நீங்கள் வேறு நாட்டில் மரிப்பீர்கள்.
11 “‘ஆனால் பாபிலோன் அரசனின் நுகத்திற்குள் தங்கள் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிபவர்களாக வாழ்வர். நான் அந்நாட்டாரைத் தங்கள் சொந்த நாட்டிலேயே இருந்து பாபிலோன் அரசனுக்கு சேவைசெய்யச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘அந்நாடுகளில் உள்ள ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்ந்து பயிர் செய்வார்கள்.’”
12 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு அதே செய்தியைக் கொடுத்தேன். நான், “சிதேக்கியா, நீ பாபிலோன் அரசனது நுகத்திற்குள் உன் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து போக வேண்டும். நீ பாபிலோன் அரசனுக்கும் அவனது ஜனங்களுக்கும் சேவைசெய்தால், பிறகு நீ வாழ்வாய். 13 பாபிலோன் அரசனுக்கு சேவை செய்ய மறுக்கும் ஜனங்கள் பகைவரின் வாள், பசி, பயங்கரமான நோய் ஆகியவற்றால் மரிப்பார்கள். பாபிலோனிய அரசனுக்குப் பணிபுரிய மறுக்கும் ஜனங்களுக்கு இவை எல்லாம் நிகழும். கர்த்தர் இக்காரியங்கள் நடக்கும் என்று கூறினார். 14 ஆனால் கள்ளத்தீர்க்கதரிசிகளோ, ‘பாபிலோன் அரசனுக்கு நீங்கள் என்றென்றும் அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள்.
“அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரச்சாரம் செய்கின்றனர். 15 ‘நான் அத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை!’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது ‘அவர்கள் பொய்களைப் போதிக்கிறார்கள். இது என்னிடமிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, யூதாவின் ஜனங்களாகிய உங்களை வெளியே அனுப்புவேன். நீங்களும் மரிப்பீர்கள். உங்களிடம் கள்ள தீர்க்கதரிசனம் உரைத்த அத்தீர்க்கதரிசிகளும் மரிப்பார்கள்.’”
16 பிறகு, நான் (எரேமியா) ஆசாரியர்களிடமும் அனைத்து ஜனங்களிடமும் சொன்னேன். “கர்த்தர் சொல்கிறார்: அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பலப் பொருட்களை எடுத்தனர். அப்பொருட்கள் மீண்டும் விரைவில் திரும்பக் கொண்டுவரப்படும்.’ அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். 17 அத்தீர்க்கதரிசிகளை கவனிக்காதீர்கள். பாபிலோன் அரசனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வீர்கள். எருசலேம் நகரம் அழிக்கப்பட நீங்கள் காரணமாக இராதீர்கள். 18 அம்மனிதர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தால், கர்த்தரிடமிருந்து வார்த்தையைப் பெற்றிருந்தால், அவர்களை ஜெபிக்க விடுங்கள். கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். அரசனது அரண்மனையில் இன்னும் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்க விடுங்கள். எருசலேமில் இன்னும் இருக்கின்ற பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். இவ்வனைத்து பொருட்களும் பாபிலோனுக்கு எடுத்துச் சொல்லாமல் இருக்கும்படி அத்தீர்க்கதரிசிகளை ஜெபிக்கவிடுங்கள்.
19 “சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமில் இன்னும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றிக் கூறுகிறார். ஆலயத்தில் தூண்களும் கடல் தொட்டியும் ஆதாரங்களும் மற்ற பணிமுட்டுகளும் உள்ளன. பாபிலோனின் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமில் இவற்றை விட்டுவைத்தான். 20 நேபுகாத்நேச்சார், அரசன் யோயாக்கீமை சிறைக்கைதியாக வெளியே கொண்டு சென்றபோது, இப்பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. யோயாக்கீம் அரசனின் மகன் எகொனியாவையும் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் சில முக்கியமான ஜனங்களையும் நேபுகாத்நேச்சார் கொண்டு சென்றான். 21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன், கர்த்தருடைய ஆலயத்திலும் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றி கூறுகிறார்: ‘அப்பொருட்கள் அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லப்படும். 22 அவற்றைப் பெறுவதற்காக நான் போகும் காலத்தில் அப்பொருட்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பிறகு நான் அப்பொருட்களைத் திரும்ப கொண்டுவருவேன். இந்த இடத்தில் அப்பொருட்களை மீண்டும் வைப்பேன்.’”