தங்கள் பாவத்திற்காக இஸ்ரவேல் தண்டிக்கப்படுகிறது
50
கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேல் ஜனங்களே!
உனது தாயான எருசலேமை விவாகரத்து செய்தேன் என்று நீ சொல்கிறாய்.
ஆனால், அவளை நான் விவாகரத்து செய்தேன் என்பதை நிரூபிக்கும் பத்திரம் எங்கே உள்ளது?
எனது பிள்ளைகளே, யாருக்காவது பணம் கடன்பட்டேனா?
எனது கடனுக்காக உங்களை விற்றேனா? இல்லை.
நீங்கள் விற்கப்பட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செயல்களைச் செய்தீர்கள்.
நான் உங்கள் தாயை (எருசலேம்) அனுப்பினேன். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செய்களைச் செய்தீர்கள்.
நான் வீட்டிற்கு வந்தேன்.
அங்கே யாருமில்லை. நான் அழைத்து அழைத்துப் பார்த்தேன்.
எவரும் பதில் சொல்லவில்லை.
நான் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று நினைத்தாயா?
நான் உனது துன்பங்களிலிருந்து உன்னைக் காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறேன்.
பார், நான் கடலை வற்றிப் போகும்படி கட்டளையிட்டால் பிறகு அது வற்றிப்போகும்.
மீன், தண்ணீரில்லாமல் மரிக்கும்.
அவற்றின் உடல் அழுகும்.
என்னால் வானத்தை இருளாக்க முடியும்.
நான் துக்கத்தின் ஆடையைப்போன்று வானத்தை இருளால் இருளடையச் செய்வேன்.”
தேவனுடைய தாசன் உண்மையில் தேவனைச் சார்ந்திருப்பான்
எனது கர்த்தராகிய ஆண்டவர் போதிக்கும் திறமையை எனக்குத் தந்தார். எனவே, இப்பொழுது நான் இந்தச் சோகமான ஜனங்களுக்குப் போதிக்கிறேன். ஒவ்வொரு காலையிலும் என்னை அவர் எழுப்பி ஒரு மாணவனுக்கு போதிப்பதைப்போன்று போதிக்கிறார். எனது கர்த்தராகிய ஆண்டவர் நான் கற்றுக்கொள்ள உதவினார். நான் அவருக்கு எதிராகத் திரும்பவில்லை. நான் அவரைப் பின்பற்றுவதை விடவில்லை.. அந்த ஜனங்கள் என்னை அடிக்கும்படிவிடுவேன். எனது தாடியில் உள்ள மயிரைப் பிடித்து அவர்கள் இழுக்கும்படிவிடுவேன். அவர்கள் என்னைப்பற்றி கெட்டதாகப் பேசி என் மீது துப்பும்போது நான் எனது முகத்தை மறைக்கமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுவார். அவர்கள் சொல்லும் கெட்டவை என்னைப் பாதிக்காது. நான் பலமுள்ளவனாக இருப்பேன். நான் ஏமாறமாட்டேன் என்று எனக்குத் தெரியும்.
கர்த்தர் என்னோடு இருக்கிறார். நான் கபடமற்றவன் என்று அவர் காட்டுகிறார். எனவே, எவராலும் என்னைக் குற்றவாளி எனக் காட்ட முடியாது. நான் தவறானவன் என்று எவராவது காட்ட விரும்பினால் அவன் என்னிடம் வரட்டும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சோதித்துக்கொள்ளாலம். ஆனால் பார்! எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுகிறார். எனவே, எவரும் நான் கெட்டவன் என்று காட்டமுடியாது. அவர்கள் அனைவரும் பயனற்ற பழைய ஆடைகளைப்போன்று ஆவார்கள். பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
10 கர்த்தருக்கு மரியாதை செய்கின்ற ஜனங்கள் அவரது தாசனையும் கவனிப்பார்கள். அந்த தாசன் முழுவதும் தேவனை நம்பி என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழ்கிறான். அவன் உண்மையில் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைக்கிறான். அந்த தாசன் அவனது தேவனைச் சார்ந்துள்ளான்.
11 பார், நீங்கள் உங்களது சொந்த வழியில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் நெருப்பையும் விளக்கையும் நீங்கள் பொருத்துகிறீர்கள். எனவே, உன் சொந்த வழியில் வாழ்வாயாக. ஆனால் நீ தண்டிக்கப்படுவாய். நீங்கள் உங்கள் நெருப்பில் விழுவீர்கள், நீங்கள் எரிக்கப்படுவீர்கள். நான் அது நடக்கும்படிச் செய்வேன்.