மோவாபிற்கு தேவனுடைய செய்தி
15
இது மோவாயைப் பற்றி துக்கமான செய்தி.
ஒரு இரவு, ஆர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
ஒரு இரவு, கீர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
அரசனது குடும்பத்தினரும் தீபோனின் ஜனங்களும் அழுவதற்குத் தொழுதுகொள்கிற இடங்களுக்குப் போனார்கள்.
மோவாப்பின் ஜனங்கள் நேபோவுக்காகவும் மேதெபாவுக்காகவும் அழுதனர்.
ஜனங்கள் தம் தலைகளையும், தாடிகளையும் மழித்துக்கொண்டு
அவர்கள் துக்கமாக இருப்பதாகக் காட்டினர்.
மோவாபின் எல்லா இடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும், தெருக்களிலும்,
ஜனங்கள் துக்கத்தின் ஆடைகளை அணிந்து அழுதுகொண்டிருந்தனர்.
எஸ்போன் மற்றும் எலெயாலே நகர ஜனங்கள் உரத்து அழுதுகொண்டிருந்தனர்.
வெகு தொலைவிலுள்ள யாகாஸ் நகரம் வரை அவர்களின் சத்தங்களை நீ கேட்கலாம்.
படைவீரர்களும்கூட கதறுகிறார்கள்.
அவர்கள் அச்சத்தால் நடுங்கிக் கொண்ருக்கிறார்கள்.
மோவாபுக்காக எனது இதயம் துயரத்தோடு அழுகிறது.
ஜனங்கள் பாதுகாப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வெகு தொலைவில் உள்ள சோவாருக்கு ஓடுகிறார்கள்.
அவர்கள் எக்லாத் செலிஸ்ஸியாவுக்கு ஓடுகிறார்கள். லூகித்துக்குப் போகும் மலைப்பாதையில் அவர்கள் ஏறிப்போகும்போது அழுகிறார்கள்.
ஓரோனாயீமின் வழியில் அவர்கள் நடந்து செல்லும்போது மிக உரத்து அழுகிறார்கள்.
ஆனால் நிம்ரீம் புருக் பாலைவனமாகக் காய்ந்திருக்கிறது.
அனைத்து தாவரங்களும் காய்ந்துள்ளன. எதுவும் பசுமையாக இல்லை.
எனவே, ஜனங்கள் தமக்குச் சொந்தமானவற்றைச் சேகரித்துக்கொண்டு மோவாபை விட்டு விலகுகிறார்கள்.
அவர்கள் அவற்றைச் சுமந்துகொண்டு பாப்லர்கிரீக்கின் எல்லையைக் கடக்கின்றனர்.
மோவாபின் எல்லா இடங்களிலும் அழுகையைக் கேட்கலாம்.
வெகு தொலைவிலுள்ள எக்லாயிம் வரை ஜனங்கள் அழுதுகொண்டிருந்தனர்.
பெரேலீம் நகரத்தில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருந்தனர்.
தீமோனின் தண்ணீரானது இரத்தத்தால் நிறைந்திருக்கும்.
தீமோனுக்கு மேலும் அதிகக் கேடுகளை நான் (கர்த்தர்) கொண்டுவருவேன்.
மோவாபில் வாழ்கிற சில ஜனங்கள் பகைவரிடமிருந்து தப்பியிருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களை உண்ண சிங்கங்களை அனுப்புவேன்.