2
“பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்’ என்பீர்கள்.”
“உங்கள் தாயோடு வழக்காடுங்கள். ஏனென்றால் அவள் எனது மனைவியல்ல. நான் அவளது கணவனும் அல்ல. அவளிடம் ஒரு வேசியைப் போன்று நடந்துக் கொள்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லுங்கள், அவளது மார்பகங்களில் இருந்து தனது நேசர்களை விலக்கும்படி அவளுக்குச் சொல்லுங்கள். அவள் தனது சோரத்தை நிறுத்தாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்குவேன். நான் அவளைத் தனது பிறந்தநாளில் இருந்ததைப் போலாக்குவேன். நான் அவளது ஜனங்களை வெளியேற்றுவேன். அவள் காலியான வறண்ட பாலைவனம் போலாவாள். அவளை நான் தாகத்தால் மரிக்கச் செய்வேன். நான் அவளது பிள்ளைகள் மேல் இரக்கப்படமாட்டேன். ஏனென்றால் அவர்கள் வேசிப் பிள்ளைகள். அவர்களின் தாய் ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொண்டாள். அவர்களது தாய் தனது செயல்களுக்காக அவமானம் அடையவேண்டும். அவள், ‘நான் என் நேசர்களிடம் செல்வேன். என்னுடைய நேசர்கள் எனக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பார்கள். அவர்கள் எனக்குக் கம்பளியும் ஆடையும் தருவார்கள். அவர்கள் எனக்குத் திராட்சைரசத்தையும் ஒலிவ எண்ணெயையும் தருவார்கள்’ என்றாள்.
“எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள். அவள் தனது நேசர்களின் பின்னால் ஓடுவாள். ஆனால் அவளால் அவர்களைப் பிடிக்க முடியாது. அவள் தன் நேசர்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பாள். ஆனால் அவளால் அவர்களைக் கண்டுக்கொள்ள முடியாது. பிறகு அவள், ‘நான் எனது முதல் கணவனிடம் (தேவன்) திரும்பிப்போவேன். நான் அவரோடு இருந்தபோது எனது வாழ்க்கை நன்றாக இருந்தது. இப்பொழுது இருக்கிறதை விட அன்று வாழ்க்கை நன்றாக இருந்தது’ என்பாள்.
“அவள் (இஸ்ரவேல்), நான் (கர்த்தர்) ஒருவர்தான் அவளுக்குத் தானியம், திராசைரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதை அறியவில்லை. நான் அவளுக்கு மேலும் மேலும் வெள்ளியும் பொன்னும் கொடுத்துவந்தேன். ஆனால் இஸ்ரவேலர்கள் அந்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்தி பாகாலுக்கான உருவச் சிலைகளைச் செய்தனர். எனவே நான் (கர்த்தர்) திரும்பி வருவேன். நான், என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்தில் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் திராட்சை பழங்கள் தயாராக இருக்கும்போது எனது திராட்சைரசத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் எனது கம்பளியையும், சணலையும் திரும்ப எடுத்துக்கொள்வேன். இவற்றையெல்லாம் நான் அவளது நிர்வாணத்தை மறைப்பதற்காகக் கொடுத்தேன். 10 இப்பொழுது நான் அவளது ஆடைகளை நீக்குவேன். அவள் நிர்வாணமாவாள். எனவே அவளது நேசர்கள் அவளைப் பார்க்க முடியும். எவராலும் எனது அதிகாரத்திலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. 11 நான் (தேவன்) அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும் எடுத்துக் கொள்வேன். நான் அவளது பண்டிகைகளையும், மாத பிறப்பு நாட்களையும், ஓய்வு நாட்களையும் சபை கூடுகிற எல்லா ஆசரிப்புகளையும் நிறுத்துவேன். 12 நான் அவளது திராட்சைத்தோட்டங்களையும் அத்திமரங்களையும் அழிப்பேன். அவள், ‘எனது நேசர்கள் இவற்றை எனக்குக் கொடுத்தனர்’ என்பாள். ஆனால் நான் அவளது தோட்டத்தைக் காடாக்கும்படி செய்வேன். காட்டுமிருகங்கள் வந்து அவற்றைக் தின்னும்.
13 “அவள் பாகால்களுக்குச் சேவைசெய்தாள். எனவே நான் அவளைத் தண்டிப்பேன். அவள் பாகலுக்கு நறுமணப்பொருட்களை எரித்தாள். அவள் ஆடை அணிவித்தாள், அவள் தனது நகைகளையும், மூக்குத்தியையும் அணிவித்தாள். பிறகு அவள் தனது நேசர்களிடம் போய் என்னை மறந்துவிட்டாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசைலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.
“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.
18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இலலாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மனமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய். 21 அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார்.
“நான் வானங்களோடு பேசுவேன்
அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
22 பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.
23 நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன்.
நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன்,
நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன்.
அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்.”